ஆன்லைனில் புத்தகம் வாங்க

Friday 29 November 2013

போட்டிச்சிறுகதை-6


சிறுகதை-முகங்கள்


அவ்வளவு நேரம் தமிழ் ஹிந்தி ஏஞ்சலீனா ஜூலி கீரா நைட்லீ ஈவா மெண்டிஸ் இப்படி லிஸ்டு நீண்டு கொண்டே கணக்கிலடங்கா நடிகைகளின் ஆபாசப்படங்களை யாரென்றே முகம் தெரியாத ஒரு மணி நேரத்திற்கு இருபது ரூபாய் கொடுத்து வந்து தன் முன் அமர்ந்திருக்கும் அந்த வாட்ட சாட்டமான வலது புஜத்தில் டாட்டு ஒட்டிய இளைஞனுக்கு காட்டிக் கொண்டிருந்த கணினி இப்போது அஸ்வினியின் இதழிலிருந்து வெளிவந்த பொய்யான முத்தத்தினை அந்த சிங்காநல்லூருக்கு அருகிலிருக்கும் பெயர் தெரியாத சந்திலிருந்து செம்பட்டி ஒட்டன்சத்திரம் மதுரை கோவில்பட்டி திருநெல்வேலி மார்க்கமாக கன்னியாகுமரியின் கடைக்கோடியில் இருந்த புதிதாக ஆரம்பித்த இணையதள நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு பதினைந்து ரூபாய் கொடுத்து அமர்ந்திருந்த அவனின் முகநூல் உள்பெட்டிக்கு பத்திரமாக சென்று சேர்ந்தது முதல் அவனுக்கு தெரியாது அந்த முத்தத்தில் பொய் இருப்பதன் காரணம் அவள் அவனுக்கு அந்த பொய்யான முத்தத்தினை அனுப்பும் போது அவளுடன் இன்னமும் இரண்டு பேர் அவர்களின் தொலைதொடர்பு வகுப்பினை புறக்கணித்து கையிலிருந்த இருபது ரூபாயினை அவனை நம்பி அவனின் ஜொல்லினை ஆணின் ஜொல்லினை பார்த்ததில்லை அதனால் அதனை காண்பிக்கத் தயாராக இருந்த அஸ்வினி அவர்கள் முன் யாரென்றே தெரியாத ஒருவனுக்கு அந்த முகநூலின் வழியே தட்டச்சு செய்து அனுப்பிய முத்தங்கள் அவர்களுக்கு வெட்கத்தினை அளித்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அஸ்வினி தட்டச்சு முத்தத்திற்கு ஒரு வாய்ப்பினை அளித்த போது ஐயோ என அவள் அலற நினைத்து அதை குரல் கம்மிய வார்த்தையாக வெளிப்படுத்தி அஸ்வினிக்குள் சிரிப்பு கோபம் அருவருப்பு கலந்த உணர்ச்சிகளை புடைச்சூழ வைத்து கணினியின் முன் அமர்ந்திருக்கும் போதும் கண்ணாடியின் முன் அமர்ந்திருப்பது போல் தன் கலாச்சார அங்கியினை அவிழ்க்க முடியாமல் தவிக்கும் இப்பெண்களுடன் தான் தன் குற்றவியல் தீஸீஸான இணையதள பாலியல் அத்துமீறல்களை சே சே இந்த வார்த்தையினை கூட அஸ்வினி முழுதாக வெறுப்பதற்கு காரணம் அவள் எடுத்துக் கொண்ட முகநூலில் ஆண்கள் ஆண்களாகவும் பெண்கள் பெண்களாகவும் இல்லாத போது பாலியல் அத்துமீறல்களின் பெயரினை சொல்வது நியாயமாகாது என்னும் பட்சத்தில் மனதில் அதனை எழுதும் போது கட்டமைத்து வைத்த பிம்பமானது இப்போது இவர்களின் ஐயோ அம்மா அபச்சாரம் இன்னும் சென்று முகநூலின் முத்தத்தினால் என்னைய கைய புடிச்சி இழுத்திட்டான் குற்றச்சாட்டினை தனக்கென இருக்கும் நிமிர்ந்த நன்னடை கீழ்கொண்ட பார்வை கூற்றுக்கேற்ப சேதுபதி வல்லரசு வாஞ்சினாதன் பரம்பரையில் தோன்றிய எப்போதோ பார்த்த முகநூலில் இப்போதும் பழகிக் கொண்டிருக்கும் அவளைப் பொறுத்தவரை முகநூல் போலீஸான அவனிடம் தன் பாலியல் குற்றச்சாட்டினை தட்டச்சு கண்ணீராய் அனுப்ப அந்த முகநூலிற்கு பின் அவளின் போலீஸ் தானா என கண்டுபிடிக்க போதுமான வசதியின்மையால் அந்த கண்ணீருக்கு அடுத்த நான்கு நாட்கள் சமாதான வார்த்தைகள் அந்த பக்கத்திலிருந்தும் கண்களின் நீர்மட்டம் குறைந்த வண்ணம் இந்த பக்கத்திலிருந்தும் புழங்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய கல்லூரியில் தானே தன் ஆண்மையினை காண்பித்து மடக்கும் அளவிற்கு எந்தப் பெண்ணும் இல்லை அல்லது யாரும் அவனுக்கு பெண்ணாக தெரியாத போர்க்காலத்தின் அடிப்படையில் இவளைத் தன் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றும் பொருட்டு களப்பணியினை முகநூலிலேயே ஆரம்பித்து ஏன் அழுகிறாய் உனக்காகத் தானே நான் இருக்கிறேன் நான்கு நாட்களிலேயே உன்னை முழுதாக புரிந்து கொண்ட என்னால் உன்னை சந்தோஷமாக வைத்திருக்க முடியாதா உன் கண்ணீரின் ஆழத்தில் பொதிந்திருக்கும் ஆயிரமாயிரம் கதைகள் என்னைத் தூங்கவிடாமல் என் கனவுகளையும் திருடிக் கொண்டு தூக்கத்தினையும் விழுங்கிக் கொண்டு தினம் தினம் தூக்கமில்லாமல் உன் நினைவுகளின் வாட்டத்தினால் கண்களை மூடினாலே முகநூலின் வழியே தெரியும் உன் முகத்துடன் நான் பேசும் வார்த்தைகள் தான் வார்த்தைகளாக மாறி முடிவில்லா பிம்பத்தினை அவன் தட்டச்சு செய்து புகைத்துக் கொண்டிருக்கும் போது அதனை உண்மையென நம்பி அடுத்த எட்டு பத்து நாட்களுக்கு அவனின் காதல் வார்த்தைகளுக்காக உள்பெட்டியினை திறந்தே வைத்து அதன் மூலம் புதிய நோயான இது போல் என்னை யாரும் கவனித்ததில்லையே உடல் முழுக்க பரவி உடல் பொருள் ஆவி அனைத்தும் உனக்கெனவே தருவேன் கண்ணே அன்பே ஆருயிரே ஆரமுதே தேனடையே தமிழ்நடையே உருக்குலைந்து செல்லும் அளவிற்கு ஆதிகால மொழி பிய்க்கப்பட்டு ஒரு நாளேனும் நானாக நீயும் நீயாக நானும் மாறி நம்மை நாமே அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மனித சஞ்சாரம் இல்லாத மூச்சுக் காற்றுக் கூட அறியப்படமுடியாத ஒரு இடமேனும் இந்த உலகத்தில் இல்லையா கேள்விக்கு பதிலான தேகத்தினை மிஞ்சிய இரகசிய இடம் யாருக்கு கிடைக்கும் இவ்வுலகத்தில் அன்பே அவளிடம் வெட்கத்தினையும் காதலினையும் அளவிற்கு அதிகமாக திணித்து அதே பார்வையினை கொண்டு திரையினை பார்த்துக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் தீயாய் தகிக்கும் காமத்தினை அடக்க பொருளினைத் தேடி தேடி தேடி தேடி தேடி தேடியும் அடக்கப்படாமல் தகித்தே இருக்கும் காமத்திற்கு இரையாய் சிக்கும் அபலைகளை வெகுளிகளை காப்பாற்றத் தான் ஒரு தீஸீஸினை செய்ய யத்தனித்து அதற்கு களப்பணியாக அடுத்தவர்களின் முகநூலில் புகுந்து முழுத் திருப்தியடையாத பட்சத்தில் பிரத்யேகமாக புதிய முகமூடியினை அணிந்து கொண்டு தனது முகநூலிற்குள் யார் நுழைந்தாலும் காதல் கவிதைகளினை மட்டுமே காணமுடியும் என்ற அளவிற்கு தமிழினை விளையாடவிட்டு நிறைய காதல் கிசுகிசு நடிகைகள் கல்லூரிப் பதிவுகள் ஆண்நண்பர்களின் குறும்புகள் சார்ந்த வார்த்தைகளை குவியவிட்டு அவைகளின் மூலம் தான் ஒரு கல்யாணமாகாத கன்னிகழியாத கவிதை ரசம் நிரம்பும் இளமங்கையான உடன் ஏகபோகமாக நண்பர்கள் குவிய குறுகிய பெட்டிக்குள் அவனுக்கும் அஸ்வினிக்கும் அரங்கேறிய காதல் சம்பாஷனைகளை தேக சம்பாஷனைகளாக மாற்றிய வார்த்தைகளை அவள் இரகசியமாக புகுந்த முகநூல்களிலும் பார்த்த ஞாபகம் பற்ற அதுவரை சம்பாஷனைகளின் நாயகியாக இருந்த அவள் மீண்டும் சம்பாஷனைகளின் ஒற்றனாக மாறி ஏற்கனவே சென்ற பல முகநூல்களுக்கு மீண்டும் இணைய யாத்திரையினை தொடங்கி அதில் சில நேரங்களில் அவனாகவும் சில நேரங்களில் அவளாகவும் இணையதள குற்றங்களை கண்டுபிடிக்க ஆராய இணையதள தவறுகளில் ஒன்றினை தானே கையினில் கொண்டு அவர்களாக மாறி அறிய முயன்றும் வாக்கியங்களும் வார்த்தைகளும் ஏன் எதற்காக பாலியல் வறட்சி போன்ற கேள்விக் குறிகள் அல்லாத கேள்விகளாக எழுந்து அவை எதுவுமே புரியாமல் முச்சந்தியில் நிற்பது போல் நின்று தோல்வியினையும் ஒப்புக் கொள்ள முடியாமல் தீஸீஸினையும் முடிக்க முடியாமல் கண்ணீரினையும் அடக்க முடியாமல் விஷயங்கள் பல முடியாமல் போக வெறுமையினை தொனித்துக் கொண்டிருந்த வானத்தினையும் அது போர்த்திக் கொண்டிருந்த இருளினையும் கூர்ந்து எதனையோ அவதானித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவளின் தோளின் மீது படறிய கணவனின் கைகள் எத்தனையோ முத்தங்களுக்கு சம்மாக தெரிந்தும் பொய்யான முத்தங்களுடன் பழகி பழகி எச்சில் சுகத்தினை மறந்து அதன் அர்த்தத்தினை அவனின் கைகளிலேயே அவளின் தேகம் தேடும் தருணத்தில் அவள் மனம் சற்றும் செவி சாய்க்காத அவனின் அந்த தீஸீஸினை விட்டுவிடு இன்னும் எத்தனையோ எதிர்காலங்களும் உன் தீஸீஸிற்கான குற்றங்களும் இந்த சமூகத்தில் நிகழ இருக்கிறது என்பதனை மறந்திடாமல் உன் தீஸீஸினை எனக்கு கொடு அதற்கு வேறு ஒரு உருவத்தினை கொடுக்கிறேன் என்னும் ஆறுதல் வார்த்தைகள் காற்றில் கரைந்து கொண்டிருந்ததை கண்டு கொள்ளாமல் அடுத்து கூறிய அன்பே அவளுக்கு புளித்து போயிருந்த போதிலும் வாழ்தலுக்கான ஆசை உண்மை தேகத்தின் மொழியறிதல் அவன் பேச்சினையொத்த தன் புதிய முகமூடியினை கிழிக்க நினைத்து அப்படி செய்வதற்கு முன் தோழிகளுக்காகவாவது தன் வீர தீர பராக்கிரம செயலினை இருவருடன் பகிரும் போது அவர்கள் சொன்ன ச்சீயின் அபத்தமான அர்த்தத்தினை கணினியும் மின்சாரமும் புரிந்துகொண்டு அவர்களை முகநூல் சிறையிலிருந்து விடுவித்த போது தனக்குள் கொண்ட உபதேசமானது சமூகத்தின் பாவாடைக்குள் சிக்கிக் கொண்டு அதன் துர்நாற்றத்தினை தாங்கமுடியாமல் நிர்பந்தத்தினால் மறைக்கப்படும் ஆசைகளை வெளிக்கொணர வெளி கிடைக்காமல் தன்னை முழு உண்மையான மனிதனாக காட்ட முகநூலில் ஒரே ஒரு பொய்யான அங்கீகாரத்தினை எடுத்து தன்னை நிர்வாணமாக்கி கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் கணங்களில் அவனின் அனாயாசமான வலையில் அபத்தமாக சிக்கி யாரென்றே தெரியாத ஒருவனுக்கு நண்பனாகி அவன் தன் உண்மையான ரூபத்தினை காண்பிக்கும் போது யாரென அறிய நினைக்கும் பிற்போக்குத் தனம் பாலியல் அத்துமீறலாக அவர்களின் வாயினில் உருவெடுத்து இணையதளமே ஆபாசதளமாக தான் பயன்படுகிறது என்னும் பொதுவுடைமையான கருத்தினை எதிர்க்கும் நான் உங்களுக்கு எதிரியாகத் தெரிவதன் காரணி பாவாடைக்குள் சிக்கிய சில்வண்டினைப் போல் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவற்றை எதிர்ப்பதற்கு பதில் ஆதரிக்கிறாளே என்று பிளக்கும் அனைத்து வாய்களுக்கு முன்னால் நான் எழுப்பும் வினா வாக்கியம் யாதெனில் எரிச்சலூட்டும் தெரிவுகளை உடைய அஸ்வினி நாமகரணத்தின் பின் இருப்பது பெண்தானா என்பதையே அறியாமல் ஆரம்பத்திலிருந்து கேனைத் தனமாக கதையினைத் தேடிக் கொண்டிருக்கும் உன்னைப் போன்ற மாங்காய் மடையனிடம் இப்போது ஒன்று சொல்கிறேன் அந்த அஸ்வினியின் பின் நீ நான் கன்னியாகுமரியில் இருக்கும் பதினைந்து கொடுத்து அமர்ந்திருக்கும் ஒருவன் சிங்காநல்லூர் ஒருத்தி உன் அப்பன் என் அப்பன் உன் காதலியின் காதலன் உன் காதலனின் காதலி ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நீ மரணத்தின் விளிம்பிற்கு சென்றாலும் அறிந்து கொள்ள முடியாதது இந்த சிரிப்பின் அர்த்தம் மட்டுமல்ல கதையினையும் நீதியினையும் மட்டுமே தேடிக் கொண்டிருக்கும் இந்தப் பிரதியினையும் தான் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஏய் அற்ப மானிடா இதனை படைப்பவன் என்னும் அகங்காரத்தில் சொல்கிறேன் இவ்வார்த்தைகள் முடியும் நேரத்தில் என் உயிரும் முகமும் அழிந்து கொண்டிருக்கலாம் ஆனால் இப்பிரதி முடியும் போது உனக்கு இருப்பது இரண்டே வழிகள் தான் பிரதிக்குள் கதையினை தேடி தேடி பித்தனாக அலைந்து செத்தொழிவதும் இலக்கணப் பிழைகளை தேடிய வண்ணமே இரண்டாவது என்னவாக இருக்கும் என்பதை இப்போது சிந்தித்துக் கொண்டிருப்பதும் ஹா ஹா ஹா