ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 30 December 2013

போட்டிச்சிறுகதை-54

சிறுகதை-ஒரு மாலை வேளையில்!!


அது சோவென மழை பொழிந்து கொண்டிருந்த மாலை நேரம், ஆறு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்ப இருந்து, ஏழு மணிக்கு மின்னஞ்சல் தயார் செய்து, அதை மேலதிகாரி பார்த்து சில திருத்தங்கள் சொல்ல, அனைத்தும் முடிகையில் மணி எட்டை ஆசையாக தழுவி இருந்தது, தினசரி கிளம்பும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாக.

வழக்கமாக சாலை விதிகளையும், போக்குவரத்து வரைமுறைகளையும் கண்ணென பேணி காக்கும் குமரன் அன்று ஆறறிவில்லா சிக்னலிடம் கடிந்து கொண்டான்.பச்சை விளக்கு கொடுத்த பிறகும் சாலையை கடந்து கொண்டிருந்த நடுத்தர வயது நபரை இறைந்தவாறு தன் இருசக்கர வாகனத்தை முறுக்கினான்.

அவன் பேருரை அடையும் போது மணி 8.30-ஐ நெருங்கிவிட்டது, கடைகள் அடைக்கும் நேரம் அது. உணவகங்களில் மக்கள் உணவை ருசிக்கும் நேரம் பேருந்து நிறுத்தங்களில் காதலர்கள் அன்றைய தினத்தின் பிரிவை, கலியுகம் முடிந்து பிறக்கும் மறுயுகம் போல அல்லவா இருக்கும் இந்த இரவின் இடைவெளி என ஏங்கி பிரியும் நேரம், பணக்கார தாத்தாக்கள் தனது பேத்திக்கும் அவள் தோழிக்கும் உயர் ரக மிட்டாய்  வாங்கி , அந்த கழுதைக்கு ஏதாச்சும் வாங்கிட்டு போலேனா, வீட்டுக்கு போனதும், தாத்தா எதுவும் வாங்கிட்டு வரலேன்னு மூஞ்ச தூக்கி வச்சிக்கும் என தனக்கு தானே பேசி, வாங்க வந்த மாத்திரையை மறந்தாலும், பேத்திக்கு பிடித்த மிட்டாயை வாங்க மறவாத நேரம். அதே நேரத்தில் இடம் இருந்து வலம் வந்தால், என்னடா இவனுக இன்னைக்கு பாத்து இத்தன பேரு வந்துகிட்டு இருக்கானுக என உணவகங்களில் வேலை பார்க்கும் வேலைக்கார சிறுவர்கள் சலிக்கும் நேரம், இவனுக தொல்ல தாங்க முடியல என பேருந்து நிறுத்த காதல் ஜோடியை பேருந்து கண்காணிப்பாளர் கடிந்து கொள்ளும் நேரம், ஏழை தகப்பனார்கள் தன் மகள் ஆசையாய் கேட்ட கிரீம் பிஸ்கட் வாங்க முடியாமல், 2 ரூபாய் பிஸ்கட்-ஐ வாங்கி சோகம் நெஞ்சை அடைக்க பையில் பிஸ்கட்-ஐ அடைத்து வீடு திரும்பும் நேரம்.

அத்தகைய நேரத்தில் தான் குமரன் துணி கடையில் நுழைந்தான். வேலைக்கு அமர்த்தப்பட்ட அனைவரும் அன்றைய கூலி வாங்கி கிளம்ப, மாரியம்மாவும் துணிகளை அடுக்கி விட்டு கிளம்ப தயாரானாள்.

     இந்தா முருகா???!! – என்ன அண்ணாச்சி??  - முருகன்
கடைக்கு கஸ்டமர் வந்திருக்காரு குழந்தைங்க செக்சென காட்டு - முதலாளி.

வந்துட்டானுக கடை அடைக்குற நேரத்துல என மனதில் கடிந்து கொண்டே  குமரனை கூட்டி போனார் முருகன்.
இந்தா மாரி சார்-க்கு பொம்பள பிள்ளைங்க துணிகளை எடுத்து காட்டு, சார் பில் கீழ. சார் கடை அடைக்குற நேரம் கொஞ்சம் சீக்கிரம் பாருங்க  - முருகன்.
குழந்தைக்கு என்ன வயசு சார்  - மாரியம்மாள்,
2 வயசுகா  - குமரன்
எந்த மாதிரி பார்க்குறிங்க? வெஸ்டனா இல்லா காட்டன் மாதிரி பார்க்குறிங்களா? – மாரியம்மாள்
இரண்டும் காட்டுங்க-கா.நல்லா மார்டனாவே எடுத்து காட்டுங்ககுமரன்
      
மாரியம்மாள் மார்டனில் ஆரம்பித்து காட்டனில் முடித்தாள். அது வரை மூன்று துணி எடுத்து வைத்து எதை எடுக்கலாம் என குழம்பியிருந்த குமரன் அவளிடமே, அக்கா இந்த மூனுல எதுக்கா நல்லா இருக்கும்? நான் இதுக்கு முன்னாடி அதிகமா குழந்தைகளுக்கு துணி எடுத்ததில்ல, என தன் அறியாமையை விளக்கி மாரியம்மாளின் உதவியை நாடினான். அவளும் தன் பதினான்கு ஆண்டுகள் அனுபவங்களில் இருந்து, இதை எடுத்துக்கங்க தம்பி இது தான் குழந்தைங்க போட்டுகிறதுக்கு நல்லா இருக்கும் என கூறி அவன் தேர்ந்தெடுத்து வைத்ததில் இருந்து காட்டன் மிடி-ஐ காட்ட, அளவு சரியா இருக்குமா அக்கானு இரண்டு,மூன்று முறை கேட்டும் திருப்தி அடையாமல், அதற்கு அடுத்த அளவையும் பார்த்து, இறுதியாக முதலில் எடுத்ததே சரியென திருப்தியானான்.

என் அக்கா பொண்ணுக்கு இன்னைக்கு பிறந்த நாள்-கா 6 மணிலே இருந்து எனக்காக காத்துகிட்டு இருப்பா,நான் இன்னும் வீட்டுக்கு போகல.அவளை எப்பிடி சமாளிக்கப் போரேன்னு தெரியல. துணி செலக்ட் பண்ணி கொடுத்ததுக்கு ரொம்ப தங்கஸ் அக்கா என்று கூறி விட்டு குமரன் பில் போட கீழே விரைந்தான்.

ஏற்கனவே சோகத்தில் இருந்த மாரியம்மாள் அழுது குமிறினாள் 3 வருடங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் பரிகொடுத்த தன் பெண் குழந்தையை எண்ணி

மாரி  மாரி     -  முதலாளி.
கீழிருந்து சத்தம் கொடுத்தார் முதலாளி கடையை அடைத்து விட்டு வீடு செல்ல.
இதோ வந்துட்டேன் அண்ணாச்சிமாரியம்மாள்

கண்ணீரைத் துடைத்து விட்டு கீழிறங்கினாள் மாரியம்மாள், நாளைய பொழுதின் சவால்களை எதிர் நோக்கி!!