ஆன்லைனில் புத்தகம் வாங்க

Thursday 13 February 2014

போட்டிச் சிறுகதை 84


தலைப்பு : ஹலால்
"கூர்மையான ஆயுதம் கொண்டு ஆட்டின் கழுத்தை ஒரே வெட்டில் வெட்ட வேண்டும். ஆட்டினுடைய கழுத்தில் ரத்தநாளங்கள் துண்டிக்க பட்டிருக்க வேண்டும். தண்டுவடம் சேத படாத வகையில் அந்த வெட்டு இருக்க வேண்டும். தலை துண்டானதும், ரத்தம் முழுவதும் வெளியேறும் வண்ணம் உடலை தலை கீழாக இருத்தி வைத்தல் அவசியமாகிறது. இவ்வகையில் அந்த ஆடு எந்த ஒரு வலியையும் உணரும் முன் இறந்து போகிறது. அது இப்பொழுது நாம் உண்பதற்கு ஏற்றதாகிறது. "

---------------------

'வேல் முருகன்  நீங்க தானா?'

"ம்... "

'ஒரு வார்த்தைல பதில் சொல்ல கூடாது! ஆமா இல்லன்னு முழுசா சொல்லுங்க.'

"வேல் முருகன் நான் தான்."

'என்ன தொழில் பண்றீங்க?'

"எலெக்ட்ரிகல்ஸ், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வெச்சிருக்கேன்."

'எத்தனை நாளா உங்களுக்கு வீராவையும் முத்துக்குமாரையும்  தெரியும்?'

"ஒரு ஐஞ்சாறு மாசமா "

'அவங்க ரெண்டு பேருக்கும் நீங்க தான் வயர், பைப் எல்லாம் சப்ளை செஞ்சீங்களா?'

கொஞ்சம் உச்ச தொனியில் "அது என்னோட தொழில்ங்க. காசு கொடுத்தாங்க வித்தேன்."

'எதிர்த்து பேச கூடாது! சப்ளை பண்ணீங்களா? இல்லையா?'

"வித்தேங்க!"

'அவங்க அந்த பொருட்களை வெச்சு என்ன பண்ண போறாங்கன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?'

"சத்தியமா தெரியாதுங்க. சமீபத்திய சிநேகம் அடிக்கடி பொருள் வாங்க கடைக்கு வருவாங்க. அவ்வளவுதாங்க"

'ஆனா அவங்க கோவில் திருவிழாவுக்கு நன்கொடை கேட்டப்ப கொடுத்திருக்கீங்க. அடிக்கடி அவங்கள தனிமைல சந்திச்சு பேசிருக்கீங்க.'

"கஸ்டமர் விட்டு போயிடக்கூடாதுன்னு தான் சார், பாக்குற இடத்துல சின்னதா பேசுவேன். அம்பது ரூபா நன்கொடை கொடுத்தேன். ஒரு மாசத்துல மூவாயிரத்துக்கு பொருள் வாங்குவாங்க. இது கூட செய்யலனா எப்படி சார்?"

---------------------

கருதாவூர் பக்கம் கோவர்த்தனுக்கும் ஆசிப் பாய்க்கும் ரியல் எஸ்டேட் தகராறு முற்றி கொண்டிருந்தது. ஆசிப் பாயை தனியாக போட்டு தள்ளினால் போலீஸ்  தனக்கு நேராக வந்து நிற்கும் என்று  கோவர்த்தனுக்கு நன்றாக தெரிந்திருந்தது.

சம்பவம் நடந்த அன்று ஆசிப் பாயோடு சேர்த்து தொழுகை நடத்திய இருபத்திநாலு பேரையும் குண்டு வைத்து தகர்த்திருந்தார்கள்.  ஆனால்  பின்னணி  நிலவரம் புரியாத அடிவர்க்கம் மற்றும் நடுவர்க்கம் வழக்கம் போல கோதாவில் குதிக்க கலவர பகுதியானது கருதாவூர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதினோரு பேரை கைது செய்து பின்னர் நான்கு பேரை மட்டும் குற்றவாளி என்று அறிவித்திருந்தது நீதிமன்றம். அதில் வேல் முருகனும் அடக்கம். பதினோரு பேரில் மூன்று பேரின் சொந்தங்கள் கைது செய்யப்பட சில நாட்களிலேயே பழிவாங்கலாக கொலை செய்யப்பட்டனர். அவையெல்லாம் கிளை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை நூற்றி சொச்சம். இதில் சொந்த பகையில், மேல் சொன்ன ரியல் எஸ்டேட் தகராறில், சாதி சண்டையில்  செத்தவர்கள் ஒரு எண்பத்தி சொச்சமாவது இருப்பார்கள்.

நீதிபதிக்கு கூட இந்த விஷயம் சாமான்யமாக புரியும். ஆனால் நம்முடைய நீதி(களில்) ஒருத்தன் நல்லவன் இல்ல கெட்டவன்னு முடிவு செய்ய சாட்சி(கள்) தேவை. அத்தனை சாட்சிகளும் வேல் முருகனுக்கு எதிராகவே இருந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட வீராவும் முத்துக்குமாரும் கூட வேல் முருகனுக்கு எதிராக சாட்சி சொல்லியிருந்தார்கள்.

காசுக்காக குண்டு வைச்சவன், காசுக்காக பொய் சொல்ல மாட்டனா? என்கிற சின்ன கேள்வி கூட இது போன்ற சாட்சியங்களின் போது யாருக்கும் தோன்றாது. போலீஸ் தொடங்கி கோர்ட் வரைக்கும்!

குண்டு வைத்து இருபத்தி நாலு பேரை கொன்றது, கலவரத்தை தூண்டியது, நூற்றி சொச்ச மரணங்களுக்கு காரணமாயிருந்தது என அடுக்கடுக்காக குற்றங்களும் அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

---------------------

வேல் முருகன், இந்த மூன்று ஆண்டுகளில் மரணத்தை ஓரளவு எதிர் கொள்ள பழகியிருந்தான். சிறை வாசத்தில் தன்னை போல பலரும் அங்கு வந்து இருப்பதையும், தன்னை போல பெரிய அளவில் யாரும் பொதுவில் பேசப்படவில்லை என்பது மட்டுமே வித்தியாசம் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தான்.


"அமெரிக்காவிலெல்லாம் ஊசி போட்டு ஒரு நிமிஷத்துல சோலிய முடிச்சுப்புருவாய்ங்கலாம். இங்க தான் இன்னும் தூக்குலே போட்டு சாவடிக்கிரானுக"
 ---
 "சவுதில மட்டும் மாட்டுனோம் தொலைஞ்சோம் அரபிக்காரன்ல ஒரு செட்டு அந்த மாதிரி ஆளுங்க. பொம்பள கெடைக்கலன்னு வையி நாம தான் சாவனும்"
...
"பீட்டர் இல்ல, பாவம்பா முப்பது நிமிஷத்துக்கு மேல தொங்கிருக்கான் அப்புறம் தான் நின்னு போச்சாம்"
...

"இரும்பு சேர்ல உக்கார வெச்சு, தலைல கொஞ்சம் தண்ணில நனைச்ச பஞ்சையும் வெச்சு கரண்ட் ஷாக் கொடுத்து கொல்லுவாங்களாம்!...  அந்தா நூத்தி ரெண்டுல இருக்கார்ல அவர் சொன்னார் எதோ படத்துல பாத்தாராம்"
---
இது போன்ற உரையாடல்கள் அவனுக்கு தினமும் பழகிய ஒன்றாகி விட்டிருந்தது.

குற்றம் செய்யாமல் வெறும் பணத்திற்காக, போலீசின் அடி உதைக்கு பயந்து, மூணு வேளை சோத்துக்கு அல்லது விசுவாசத்துக்கு என தினுசு தினுசாக அங்கே வந்து சேரும் ஆட்கள் அதிகம்.

வேல் முருகனை போலவும் சில கேஸ்கள் வரும். ஆனால் மரண தண்டனையாக பெரும் பாலும் இருக்காது. தனக்கு மட்டுமே இப்படி என்று பல நாள் எண்ணிக்கொள்வான்.

---------------------

காலை தேநீர் வரிசையில் மணி இவனிடம் கிசுகிசுத்து விட்டு போனான்.

"உன்னது போலத்தான் வெடி குண்டு கேஸ்"

பேப்பரில் கொஞ்சம் விலாவரியாக போட்டிருந்தார்கள். மொத்தம் ஐந்து பேருக்கு தூக்கு. தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி பிரித்து போட்டிருந்தார்கள் வேறு வேறு சிறைகளில்.

சரியாக பத்து நாளாகியிருந்தது ரஹீம் அங்கு வந்து. ரஹீம் பார்ப்பதற்கு சின்னப்பையன் போல இருந்தான். மீசை தாடி எல்லாம் சுத்தமாக மழித்திருந்தான். சோகம் பவுடர் போல அவனை அப்பிக்கொண்டு இருந்தது. தனிமையில் இருப்பான். செய்திகளை வாசிப்பான். யாரும் அவனிடம் அவ்வளவு எளிதாக நெருங்குவதில்லை. யாரையும் அவனும் அணுகுவதில்லை.

பெரிய கேஸ்! தினமும் பத்திரிக்கைல செய்தி வருது. அதுவும் முதல் பக்கத்துல!

---------------------

ரஹீம் சம்பந்த பட்ட குண்டு வெடிப்பு கேஸ் குறித்து செய்திதாள்கள் பர பரப்பாக செய்தி வெளியிடும். அவனது வயது, பள்ளி நன்னடத்தை, குடும்ப பின்னணி என எதாவது ஒன்று தினமும் பிரச்னைக்குரிய செய்தியாகும்.. எல்லாவற்றையும் போலீஸ் ஆதாரத்துடன் மறுக்கும். ஆறு மாதங்களில் தேர்தல் வரவிருப்பதை முன்னிட்டு ரஹீமுக்கு எல்லா கருணை கதவுகளும் அடைக்க பட்டிருந்தது.

அவனுடைய வாப்பா உட்பட குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள், குடும்ப நபர்களிடம் பேட்டி வாங்கி செய்தி போட்டிருப்பார்கள். ஒரு நாள் அதிக பட்சமாக அவனுடைய வாப்பா தலையிலடித்து அழுவது போன்ற ஒரு புகைப்படத்தை முகப்பு செய்தியாக போட்டிருந்தார்கள். இது போன்ற செய்திகளை படித்து விட்டு மதிய உணவில் அல்லது இரவு செல்லில் ரஹீமை பார்க்கும் போது என்னவோ கனமாக இருக்கும் வேல் முருகனிற்கு.

அப்போதைக்கு அந்த வார்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான் தூக்கு. மத்ததெல்லாம் சில்லறை கேஸ் அல்லது ஆயுள் தண்டனை. வேலுவுக்கு ரஹீமை பார்க்கும் போது பாவமாக இருக்கும். வேலுவும்  பாவம் தான் ஆனா இன்னும் மூணு வருஷம் இருக்கு. ஆனா ரஹீம் கொஞ்ச நாள்ல சாகப்போறவன்.

---------------------

வேல் முருகன் தினமும் ரஹீம் குறித்த செய்திகளை தாள்களில் வாசிப்பதும் அவனை ஒரு ஓரமாக கவனிப்பதும் வாடிக்கையாகிவிட்டிருந்தது. ரஹீமின் வாப்பா நாளுக்கு நாள் செய்திகளில் தளர்ந்து கொண்டிருந்தார். ரஹீமோ நாளுக்கு நாள் தெளிந்து கொண்டிருந்தான். நாள் தெரிந்த மரணம் அவனை லேசுபடுத்தி கொண்டிருந்தது.

நாளை காலை அவனுக்கு தூக்கு என்பது கிட்டத்தட்ட உறுதியான ஒரு நிலை.

உணவின் போது இவனிடம் பேச்சு கொடுத்தான்.

'அண்ணே உங்களுக்கும் தூக்காம்ல?'

"ம்..."

'இன்னும் எத்தனை நாள் இருக்கு?'

"மூணு வருஷம்."

'ரொம்ப கஷ்டம் இல்ல. எனக்கு பரவாயில்ல நாளைக்கு முடிஞ்சுடும்.
ப்ச்... வாப்பா தான் பாவம்!' தாடையை ஒரு தினுசாக சொரிந்து கொண்டே சொன்னான்.

வேலு தயக்கத்தோடு கேட்டான் "பயமா இருக்கா?"

'இல்லண்ணே!'

"உண்மையிலையே நீ இத செஞ்சியா?"

'அக்காவுக்கு நிக்காஹ். பணம் தரேன் வண்டி ஒட்டுறியானு கேட்டாங்க. ரெண்டு மாசம் ஓட்டுனேன். வண்டில தான் எல்லாத்தையும் அனுப்பிருக்கானுங்க. எனக்கு தெரியாதுனு சொன்னேன். நான் கெமிக்கல் இஞ்சினீரிங் ட்ராப் அவுட். முஸ்லீம். யாரும் நம்பல.

கைது பண்ண அன்னைக்கே அக்கா மருந்த குடிச்சுருச்சு. இனிமே என்ன'

வெறுமையாய் இருந்தது.

---------------------

வழக்கமான காலைகளில் ஒன்றாக அது இல்லை வேல் முருகனுக்கு.

"நாப்பது நிமிஷத்துக்கு மேல ஆச்சாம்ல" யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

"சின்னப்பையன்பா! பாவம்" உச் கொட்டி கொண்டிருந்தார்கள்.

பேப்பரை புரட்ட தொடங்கினான் வேல் முருகன்.

"பயங்கரவாதி ரஹீமுக்கு இன்று தூக்கு!" முகப்பில் செய்தி போட்டிருந்தார்கள். கீழே பேட்டி செய்தியில் அவனுடைய வாப்பா தொலைந்து போனதாக செய்தி இருந்தது. கிணற்றில் கிடக்கும் பிணம் அவர்தானா என்று போலீஸ் உறுதி செய்துகொண்டிருக்கிறதாம்.

ஆறாம் பக்கத்தில் சின்ன பெட்டியில் ஒரு செய்தி வந்திருந்தது. ஐந்து தீவிரவாதிகளில் ஒருவர் வாக்குமூலம் கொடுத்திருந்தார் ரஹீமுக்கு இதில் தொடர்பில்லை என்று.

அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக அதிகாரிகள் சொல்லியிருந்தனர்.

வேல் முருகனுக்கு கழுத்து அருகுவது போல இருந்தது.