ஆன்லைனில் புத்தகம் வாங்க

Monday 3 February 2014

சிறுகதைப் போட்டி 96

ல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த நேரம். உண்டு களைத்த ஒரு மதிய வேளை. ஸ்டிரெந்த் ஆப் மெட்டெரியல்ஸ் என்ற ஏற்கனவே மொக்கையான ஒரு சப்ஜக்டை படு மொக்கையாக்கி தாலாட்டு பாடி கொண்டிருந்தது, கோமளா மேடம்.
தீடீரென்று அப்பா வந்தார். ஏதோ பேசினார்.. உள்ளே வந்து தூக்க கலக்கத்தில் இருந்த என்னை பார்த்து ‘You can Go’ என்றது மேடம்.
நானும் பையய் தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்தவனிடம் நோட்ஸ் எடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

"என்னப்பா ஆச்சு"?

"பெரியப்பா இறந்துட்டாருடா."

பிடிபடவில்லை. "யாருப்பா? புரியலயே?" என்றேன்.

"வாத்தியார் டா. செங்கோட்டை பெரியப்பா."

என்னால் நம்பவே முடியவில்லை. போன மாதம் கூட பார்த்து விட்டு வந்தேன். கான்பூர் போய்விட்டு வந்து அவரிடம் போட்டோவெல்லாம் காமிக்கலாம் என்று கூட நினைத்திருந்தேன். அதற்குள்.

பெரியப்பாவை வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள்.. வேலை பார்த்தபோதும் வாத்தியார் தான். ஓய்வு பெற்ற பின்னும் வாத்தியார் தான். அதுவும் இரண்டே இரண்டு வார்தைகள் வைத்து ஹிந்தியில் குடைந்து எடுத்து விடுவார்.

"துமாரா நாம் கியா ஹை"? ஒரு முறை ஊருக்கு போகும் பொது கேட்டார்.

"மேரா நாம், மேரா நாம்" என்று கதக் வாசித்து கொண்டிருப்பேன்.

"க்யா பட் ரஹே ஹோ" ? என்பார்.

"மேய்ன் மேய்ன் " அதற்கு மேல் வராது.

"யத்தா, சும்மா இருக்கிகளா. அந்த பயல போட்டு குமைச்சிக்கிட்டே இருக்கியளே?" என்பாள் பெரியம்மா.

ஆயிற்று.மதியமே பஸ் ஏறி தென்காசி வந்தடைந்தோம். இரவு ஏழு மணியாகிருந்தது. அங்கிருந்து செங்கோட்டைக்கு பேருந்து ஏற வேண்டும். கூட்ட நெரிசலில் ஒரு பேருந்தில் முந்தியடுத்து ஏறினால்,

"முத்துசாமி தெரியாதாத்தா? நம்ம பிள்ளையார் கோவில் வாத்தியாரு, போயி சேர்ர வயசா அவனுக்கு?", இரண்டு பாட்டிகள் பேசிக்கொண்டு வந்தது.

அப்போதுதான் கவனித்தேன். பேருந்து முழுக்க துட்டி விசாரிக்க வந்த கூட்டம். கிராமத்தில் ஏறக்குறைய எல்லோரும் வந்து எட்டி பார்த்து விடுகிறார்கள். நல்லதுக்கு இல்லையென்றாலும் பொல்லாப்புக்கு போயே ஆக வேண்டும். கிராமத்து சொலவடை.

பேருந்து நிறுத்ததில் இருந்து பெரியப்பா வீடு நூறடி தூரத்தில் இருக்கும். இறங்கிய மறு நிமிடமே,

"மாமா, போய்டியளே, கடைசியா உங்கள பாக்க கொடுத்து வைக்கலயே?" என்று கனத்த குரலில் ஒரு ஒப்பாரி ஓலம்.

திரும்பி பார்த்தால் அம்மா, அழுதுகொண்டே வேகமாக வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாள். இந்த குரலில் இந்த வேகத்தில் அம்மாவால் பேச முடியுமா என்று இன்று வரை என்னால் நம்பமுடியவில்லை.

வீட்டின் உள்ளே கூட்டம் கூடியிருந்தது. முற்றத்தில் செல்வண்ணன் நின்று கொண்டிருந்தான்.நேராக பார்த்தேன். தலையை குனிந்து கொண்டே "உள்ளே போய் பாருல" என்று கை காட்டினான்.

இளைய அண்ணன் சிவா அதற்கடுத்து நின்று கொண்டிருந்தான். வருவோர் போவோர் தோள் மீது சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்த காட்சி இன்று வரை மறக்க முடியாதாக இருக்கிறது. எவரையும் ஒரு உலுக்கு உலுக்கி விடும் தருணம். அவன் மட்டும் விதி விலக்கா. கடைக்குட்டி வேறு.

உள்ளே அறையில் மூலையில் சாய்த்து வைக்கபட்டிருந்தார். நெற்றி நிறைய விபூதி. வெள்ளைத்துணியில் நாடிகட்டு. வாய் திறந்து கண் மூடி மீளாதூக்கத்தில் பெரியப்பா. இந்த காட்சி எனக்கு என் பாட்டியின் இறுதி நாளை ஞாபகபடுத்தியது. இதே இடத்தில் இதே கோலத்தில் பாட்டியை பார்த்தேன். ஒரு பத்து வயது இருக்கும். அந்த கோலத்தில் பாட்டியை பார்த்து பயந்து அந்த வீட்டின் பின்புறம் இருக்கும் கொய்யாமரத்திற்கு அருகில் செல்வதே இல்லை.இருட்டாக இருக்கும்.

"காலைல சீக்கிரம் எந்திரிக்கணும்டே. வெள்ளன கிளம்பனும். ஆமா. தூங்காத."என்று சொல்லிவிட்டு படுக்க போனார்.

"சரி பெரியப்பா. நாலு மணிக்கு எந்திரிச்சி உங்க கூட வந்துர்தென்." என்றேன்.

செங்கோட்டை போகும்போதெல்லாம் காலை நேரத்தில் எழுந்து இவர் வாக்கிங் போவதை கவனித்திருக்கிறேன். ஒரு முறையாவது கூட போயி பார்த்து விட வேண்டும் என்று ஒரு முடிவு. அதற்கு நாள் கூடி வந்தது. ஆற்றில் குளித்து ரொம்ப நாள் வேறு ஆகியிருந்தது.

எவ்ளோ தூரம் பெரிப்பா நடக்கணும், ஆறு எப்போ வரும்?”வீட்டிலிருந்து நூரடி நடந்த களைப்பில் நான்.

செத்த அமைதியா வரியா?”

ஏதோ கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விடலாம் என்ற என் நினைப்புக்கு மண் அள்ளி போட்டார்கள்.

இரண்டு கிலோமீட்டர் தூரம் விசுக்கு விசுக்கு என்ற கையய் ஆட்டி ஆட்டி நடந்து,மூச்சிரைத்து, துண்டால் துடைத்து,

வந்துடுச்சா பெரிப்பா?”

ஏ பாதி தூரம் தாண்டே வந்துருக்கோம். அதுக்குள்ள என்ன உனக்கு?”

தலை சுற்றியது. சரி ஆற்றில் குளிக்கலாமே என்ற ஒரே ஆசையய் மனதில் வைத்து நடந்து, அதோ ஆற்றை நெருங்கிவிட்டோம். பெரிசுகள் எல்லாம் வேட்டியய் தூக்கி கொண்டு உக்கார ஆரம்பித்தன. பகீரென்றது.பழக்கமில்லயே.

என்னடே, மச மசனு பாக்ர? இருந்துட்டு வா.

ஒண்ணும் வர்லே பெரிப்பா?”

ஒண்ணுக்காவது போய்ட்டுவாடா.

சரி, குளிக்கலாம் என்று பார்த்தால், கணுக்கால் வரைதான் தண்ணீர் ஓடியது.

இதுல எப்டி குளிக்றது?”

இப்டிதான்தண்டால் எடுப்பது போல் காலை நீட்டி படுத்து தலையய் முக்கி முக்கி எடுத்தார்.

குளிடே. சீக்ரம்”.

அதேமாதிரி படுத்து காலை நீட்டி, தலையய் முக்கி எழுந்து பார்த்தால், எனக்கு முன்னே ஒரு பெரிசு சலப் சலப் என்று தண்ணீரை கோரி ....

துள்ளி எழுந்து, நான் வீட்ல குளிச்சிக்ரன் பெரிப்பாஎன்று ஓடி வந்துவிட்டேன்.

அவரை தூக்கி திண்ணையில் பெஞ்சில் உட்கார வைத்தார்கள். சரிந்தார். இரண்டு பேர் பின்னாடி பிடிக்துக்கொள்ள, வரிசையாய் வந்து தலையில் எண்ணை ஊற்றினார்கள்.

இன்னும் வேற யாராவது வைக்கணுமா?”

போல,போயி வச்சிட்டு வா.இனிமே எப்ப பாக்கபோற?” அம்மா சொன்னாள்.

கையில் கொஞ்சம் எண்ணை எடுத்து தலயில் தடவினேன். தலை ஜிலிர் என்றது இப்போது கூட கையில் உணர முடிகிறது. கோடித்துணி உடுத்தினார்கள். சந்தனம், மாலை, இன்னும் சில.

இரவு எட்டு மணி. வெளியே தூக்கி கொண்டு வந்தார்கள்..

வென்று நெஞ்சில் அடித்து கொண்டு பெரியம்மா கதறினாள்.

இதே அழுகையய் பத்து வருடத்திற்கு முன் அம்மாவிடம் பார்த்தேன். அப்போது பாட்டி இறந்திருந்தாள். பெண்கள் யாரும் பிணத்துடன் செல்ல முடியாது. அதனால் ஜன்னலில் இருந்துதான் அம்மா, சித்தி, பெரியம்மா எல்லோரும் பார்த்து கொண்டிருந்தனர். பாட்டியை தூக்கியவுடன், இதே அழுகை.குழுங்கி குழுங்கி அழுதாள். வென்று கதறினாள். நெஞ்சை பிடித்துக்கொண்டாள்.இனிமேல் அவள் தன் அம்மாவை பார்க்க மாட்டோமே என்ற வருத்தத்தை விட, புகுந்த வீட்டிற்கு சென்ற பின் இவ்வளவு நாள் தன் அம்மாவை பிரிந்திருந்ததை வெளிப்படுதுமாறு இருந்தது அந்த அழுகை.

தீச்சட்டியை தூக்கி கொண்டு அண்ணன் முன் செல்ல, பெரியப்பாவை தூக்கிக்கொண்டு திரும்பாதொரு பயணத்திற்கு வழியனுப்ப சென்று கொண்டிருந்தோம்.

கடைகள் அடுக்கி வைக்கபட்டிருக்க அவரை கிடத்தி, வரட்டியால் முகம் மூடப்பட்டது. பானையய் சுமந்து கொண்டு அண்ணன் சுற்றி வந்தான். பானை உடைத்து. தீப்பந்தம் கொளுத்தி தீயிட்டு,

திரும்பி பாக்கதடே. அப்டி வீட்டுக்கு போய்டு.” அண்ணனுக்கு யாரோ சொன்னார்கள். திரும்பினோம்.

மறுநாள், தீயாத்தும் நாள். அண்ணன் தன் கைகளில் ஒரு சொம்பில் பால் எடுத்து சென்று, சாம்பலில் ஊற்றி, பழம் பத்தி வைத்து தீபம் காட்டினான். சாம்பலை அவர்கள் கிளறினார்கள். நேற்று காலையில் எங்களோடு நடமாடிக்கொண்டிருந்த பெரியப்பா இன்று ஒரு மண்டை ஓடும்,இரண்டு எழும்புமாய் கிடைத்தார். அண்ணன் கண்களில் நீர் துளிர்த்திருந்தது. ஒரு பானையில் சாம்பலை அள்ளி போட்டு அருகில் ஓடும் ஆற்றில் படியில் இறங்கி, பானயை கவிழ்த்து.........பெரியப்பா கரைந்தார்.

மெய்ன் சாத் பட் ரஹா ஹூன் பெரியப்பா!”. வார்தைகள் காற்றில் கரைந்தாலும் பெரியப்பாவிற்கு கேட்டிருக்கும்.