ஆன்லைனில் புத்தகம் வாங்க

Sunday 26 January 2014

போட்டிச் சிறுகதை 66

சிறுகதை                     : ஒரு மார்கழியில் கொலை


மார்கழி 1
அம்பத்தூர் காவல் நிலையத்தில் அபசுரமாக ஒலித்த தொலைபேசியின் சுப்ரபாதம், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பாராவின் தூக்கத்தை கலைக்க, களைப்பு நீங்காத அலுப்பில் மெல்ல தன் தலையை சுற்றி இருந்த சால்வையை விளக்க்கி பதில் கூறுவதற்கு முன் 'உனக்கேன் சிரமம்' என்பது போல நின்றுவிட்டது.'இனி தூக்கம் வந்த மாதிரிதான்'எள்ற முனங்களுடன் கழிவறையை நோக்கி சுப்பாராவ் நடக்கத் தொடங்கியபோது, தொலைபேசி மீண்டும் தன் கானக்குரலில் கதறத் தொடங்கியது. அந்த தொலைபேசியை எடுத்த வேகத்தில் ஏதோ ஒரு விலாசத்தை அவசரமாக குறித்து,அதே அவசரத்துடன் பெஞ்சில் தூங்கிக்கொண்டிருந்த ஹெட்கான்ஸ்டபிள் கண்ணனை தட்டி எழுப்பினார் சுப்பாராவ். ஒரு நிமிடம் கூட தாமதியாமல் தன் சுந்தரம் அய்யாங்கார் காலத்து டிவிஎஸ் பிப்டியை மிதித்து சம்பவ இடத்திற்கு கிளம்பிய போது மணி ஆறு, மார்கழி ஒன்று.

எவரேனும் போர்வையை உருவினால் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு திரும்ப போர்த்திக் கொண்டு தூங்கும் அளவு குளிர் நிலவும் அந்தக் காலை வேளையில் கைபேசி நம் தூக்கத்தை கலைத்தால் எவ்வளவு ஆத்திரம் வரும். ஆனால் ராகவனால் கோபப் பட முடியவில்லை, அவனை அழைத்தது அவன் காதலி பிரியா என்பதால். அவள் கூறிய விலாசத்தைக் குறித்துக் கொண்டு கதிரவன் தன் தூக்கத்தை தொடர நினைக்கும் காலை வேளையில் தன் இரு சக்கர வாகனத்தில் சீறிப் பாய்ந்தான். வாகன ஓட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன் தன் காதலியுடன் நடந்த சந்திப்பை மனதில் அசைப்போட்டன்.

காந்திப் பூங்காவில் ராகவனுக்காக காத்திருந்த பிரியா, அவனைக் கண்டவுடன் 'எப்பவும் பசங்கதான் வெயிட் பண்ணுவாங்க. இங்க எல்லாமே தல கீழ நடக்குது' என்று சலித்துக் கொண்டாள்.

ராகவன் அவள் கையை பிடித்து, அவளை தன் மார்பினுள் அணைத்து, போப் ஆண்டவர் முத்தம் ஒன்று அவள் உள்ளங்கையில் கொடுத்து அவள் சினத்தை குறைத்துவிட்டு, 'அப்பா என்ன சொன்னார்?' என்று கேட்டான்.

'அப்பா ஒ.கே. சொல்லிடாரு' என்று சொல்லி 1000 வோல்ட் பல்ப் போல் பிரகாசித்த பிரியாவின் முகம், திடீர் மின் வெட்டு வந்தது போல் 'அதுல ஒரு கண்டிஷன் இருக்கு' என்று அணைந்தது.

'அப்பா நீ கொஞ்சம் பிரபலம் ஆகணும்னு நினைக்கராறு' என்று சொல்லி அவள் தயங்க, 'என்ன மேடம் சிட்டில நான்தான் நம்பர் ஒன் மாட்ரிமோனியல் டீடெக்டிவ்னு உங்க அப்பா கிட்ட சொல்லலியா?' என்று சினுங்கினான்.

'சொன்னேன். ஆனா அப்பாவுக்கு அது பிடிக்கல. தனிமனித வாழ்கைய நீ ரகசியமா நோட்டம் விட்டு தகவல் சேகரிக்கறது ஒழுக்கம் இல்லைன்னு அவர் நினைக்கிறார்.', அவன் எதோ சொல்ல வர, அவனை தடுத்து விட்டு பிரியா தொடர்ந்தாள், 'அவர் கிட்ட நான் சண்டை போட்டேன். கடைசியா அவர் கொஞ்சம் எறங்கி வந்தாரு. ஒரே ஒரு கேஸ்லயாவது நீ வெளிப்படையா துப்பு துலக்கி பிரபலம் ஆகிட்டா நம்ம கல்யாணத்தை அவரே செய்து வைக்கரன்னு சொல்லி இருக்காரு. எனக்காக இது கூட செய்யமாட்டியா ராகவ்?' என்று மனதை வசீகரிக்கும் தோனியில் அவனை கெஞ்சினாள்.

'இதுதான் எறங்கி வர்ரதா' என்று தன்னுள் நினைத்துக் கொண்டான். முடியாது என்று சொல்லி வெடிக்கும் ரணகளத்தை விட அந்த ரத்த களமே மேல் என்று முடிவு செய்து 'உனக்காக கண்டிப்பா செய்றேன் என்று' ராகவன் சொல்லி முடிப்பதற்குள் பிரியா அவனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

பழனியப்பா நகரில் இருந்த ஒன்பதாம் நம்பர் வீட்டின் வாசலுக்கு சுப்பாராவ், கண்ணனுடன் வந்து சேர்ந்தார்.வீட்டின் வாசலில் கூடியிருந்த அக்கம் பக்கத்துக்கு வீட்டார், போலீஸ் வருவதைக் கண்டு விளகினர். 'யாரும்மா போன் பண்ணது' என்று சுப்பாராவ் கேட்க, 'நான்தாங்க. இந்த வீட்டு வேலைக்காரி காலை நாலு மணியில இருந்து  கதவ தட்டினேன். யாரும் தொறக்கல. போன் பண்ணா உள்ளயே  அடிக்கற சத்தம் கேட்குது.அதுதான் சந்தேகத்துல உங்களுக்கு போன் பண்ணேன்' என்று கூறினாள்.

'கண்ணா போய் கதவ ஓட' என்று சுப்பாராவ் ஆணையிட, கண்ணனன் தன் வாலிப வலிமைகளையும் கடப்பாரையும் கொண்டு கதவை உடைப்பதை கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து ராகவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருக்கும் படி கண்ணனை வாசலில் காவல் நிறுத்திவிட்டு சுப்பாராவ் உள்ளே சென்றார். அவர் சென்ற பதினைத்து நிமிடங்களில் போலீஸ் வாகனமும், மருத்துவ ஊர்தியும் வந்ததையும், அடுத்த இருபது நிமிடங்களில் வீட்டினுள்  இருந்து இரு உடல்கள் கொண்டு வரப்பட்டதையும் ராகவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த உடல்களின் பின் வெளியே வந்த சுப்பாராவ், 'மிஸ்டர் ராகவன் இங்க  என்ன பண்றீங்க?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

'இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன் கூட்டத்தைப் பார்த்து அப்படியே நின்னுட்டேன்' என்று சமாளித்தான்.

'மாட்ரிமோனியல்ல இருந்து கிரைம்கு மாறியாச்சா?' என்று ஏளனம் செய்தார்.

'அது எல்லாம் ஒரு கட்டாயக் கதை, அப்பறம் விவரமா சொல்றேன். என்ன கேஸ் சார்?' என்று ராகவன் கேட்க 'வாங்க டீ சாப்டுடே பேசலாம்' என்று கடையை நோக்கி அழைத்துச் சென்றார்.

டீக்கடையில் சுப்பாராவ் கொடுத்த தகவல்களை ராகவன் தன் கைபேசியில் குறித்துக்கொண்டான்.

  • வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள் பக்கமாக பூட்டி இருந்தன.
  • கணவன் மனைவி இருவரும் படுக்கையில் இறந்து கிடந்தனர்.
  • பணம் மற்றும் நகைகள் திருடு போன தடயங்கள் எதுவும் இல்லை.
  • அவர்கள் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகத் தெரியாவில்லை, உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின்பு தான் இறந்ததன் காரணம் தெரியும்.
  • கடைசியாக நேற்று மாலை ஆறு மணிக்கு அவர்களை உயிருடன் கண்டது அந்து வீட்டு வேலைக்காரி.
  • அக்கம் பக்கம் விசாரித்ததில் அன்பாக வாழ்ந்த இளம் தம்பதியர் எனத் தெரிகின்றது.
  • இருவர் தவிர்த்து அந்த வீட்டிற்கு வேறு யாரும் வந்தது கிடையாது என்று அந்த வேலைக்காரி உறுதியாக சொல்கிறாள்.

மார்கழி 2

'என்ன ராகவன் ஸ்டேஷன்கு வந்திருக்கிங்க. அந்தக் கணவன் மனைவி கேஸ்ஆ' என்று காவல் நிலையத்தினுள் நுழைந்த ராகவனை பார்த்துக் கேட்க, அவன் 'ஆம்' என்று தலையாட்ட, மேலும் தொடர்ந்தார் 'அந்த கேஸ்ல எங்களுக்கே வேலை இல்லைன்னு ஆயிடுச்சு. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் புட் பாய்சன்னு வந்திருக்கு. நீங்க ஏன் இன்னமும் அதுல ஆர்வமா இருக்கீங்க? ' என்று சுப்பாராவ் கேட்க, 'என் உள் மனசு எதோ தப்பு நடந்திருக்குன்னு சொல்லுது' என்றான் ராகவன்.

'போய் உங்க பொழப்ப பாருங்க ராகவன், உங்க காதலை வாழவைக்க வேற கேஸ் ஏதாவது வந்தா நானே சொல்லி அனுப்புறேன்.' என்று அவனை திட்டி அனுப்பினார்.

மார்கழி 6

சில நாட்கள் கடந்து சென்றாலும், ராகவனின் மனம் சமாதானம் அடையவில்லை. எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று அவன் மனது அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டிருந்தது. 'அந்த வீட்டிற்க்குச் சென்று ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்' என்று முடிவு செய்தான்.

அன்று இரவு யாருக்கும் தெரியாமல் ராகவன் அந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக பின் வாசல் பால்கனி  வழியே நுழைந்தான். மரணம் நடந்த அந்த வீட்டில் ஒரு இடுகாட்டின் அமைதி நிலவியது. ஒவ்வொரு அறையாக ஏதேனும் தகவல் கிடைக்குமா என்று தடயங்களைத் தேடத் தொடங்கினான். முதலில் சமையல் அறையின் குப்பைத் தொட்டியை ஆராய்ந்தான், அதில் ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில் இரண்டு காளான் துண்டுகள் கிருமிகள் சூழ கருநிறத்தில் இருந்தன. 'ஒரு குடும்பத்தை நீயா கொன்றாய். நிச்சயம் இருக்காது' என்று அந்த காளானுடன் பேசுகையில் பிரிட்ஜின் அருகில் ஒரு அறை மட்டும் பூட்டி இருந்ததைக் கண்டான்.

அங்கு இருந்த சுத்தியை வைத்து அந்த அறைக்  கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பல நாள் துவைக்கப்படாத ஒரு காலணியில் இருந்து வருவது போன்ற வாசனை அந்த அறை எங்கும் பரவி இருந்தது. ஜன்னல் ஏதும் இல்லை, சூரிய ஒளி  வர எந்த ஒரு துவாரமும் இல்லை. அந்த அறையினுள் இருந்த சவுண்ட் ப்ரூப் டோர், ப்ரொஜெக்டர், டிஸ்கோ லைட்ஸ்  அவனுள் பல கேள்விகளை எழுப்பியது. இருவர் மட்டும் வாழும் வீட்டில் இவை எதற்கு?

குளியல் அறையில் தான் அவனுக்கு சில தடயங்கள் கிடைக்கத் தொடங்கின. அதுவரை அந்தக் கொலையின் மேல் இருந்த அவனது பார்வை திரும்பத் தொடங்கியது. அந்த தடயம் கிடைத்த பின், புதிய தெளிவான கோணத்தில் வீட்டை மீண்டும் அலசத் தொடங்கினான். சில தடயங்கள் சிக்கின. கதவை உடைத்தது வீண் போகவில்லை என்று தன்னுள் நினைத்துக் கொண்டு பால்கனி கிரில் கதவை தான் கொண்டுவந்த பூட்டால் பூட்டி விட்டு வெளியே வந்தான்.

மார்கழி 7

பிரியாவுக்கு அழைத்து, 'தாலி கட்ட கழுத்த  தயாரா வைச்சிக்கோ. இந்த கேஸ்ல பெரிய தடையம் கிடைத்திருக்கு. இந்த கொலைய  வெளிச்சத்திற்கு கொண்டுவந்துட்டு உன்ன மீட் பண்றேன்' என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.

மார்கழி 28

காந்திப் பூங்காவில் பிரியா வர ராகவன் காத்திருந்தான். ராகவனைக் கண்டவுடன் பிரியா ஆர்வத்துடன் 'ஹை. கேஸ் என்ன ஆச்சு?'  என்று உற்சாகத்துடன் கேட்டாள்.

'இந்த கேஸ் வேண்டாம், வேற கேஸ் கிடைக்கும்' என்று சோகத்துடன் கூறினான்.

சினங்கொண்ட பிரியா, சூடனா எண்ணையில் போட்ட கடுகு போல் வெடிக்கத் தொடங்கினாள். உண்மையை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல், முள்ளின் மேல் நிற்பது போல் ராகவன் தவித்தான். பிரியா அவளது ஆத்திரம் தீர வெடித்தவுடன்,அவள் பிரம்மாயுதத்தை பயன்படுத்த துவங்கினாள். அணை உடைத்துக்கொண்டு கண்ணீர் கடல் பெருக, ராகவன் தன் மனப் பூட்டை உடைத்தான்.

மார்கழி 6

அன்று இரவு அந்த வீட்டை முதலில் அடைந்த பொழுது நானும் காவல் துறையின் கண்ணோட்டத்தில் தான் அலசினேன். ஒரு மர்ம அறையைத் தவிர வேறு ஒரு பெரியத் தடயமும் கிடைக்க வில்லை. சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்ற பொழுது, அங்கு இருந்த ஒரு துவாரத்தில் விஸ்பர் மற்றும் ஸ்டேப்ரீ கவர்கள் இருப்பதைக்கண்டேன். என் மூளையில் ஒரு கேள்வி தோன்றியது. ஆம் இந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்திருக்க சாத்தியங்கள் இருக்கு என்று, ஆடைகளை அலசத் தொடங்கினேன். சில ஆடைகளின் அளவுகள் வேறு பட்டிருந்தன. துணி அலமாரியின் அடுக்குகளின் மேல் போடப் பட்டிருந்த செய்தித்தாளின் அடியில் ஒரு கன்னிகாஸ்த்ரியின் புகைப்படம் கிடைத்தது.

மார்கழி 9

தேர்தல் ஆணையத்தில் பணி புரியும் என் நண்பன் ஒருவன் உதவியுடன், வாக்காளர் அடையாள அட்டை தகவல் கிடங்கிலிருந்து அந்த கன்னிகாஸ்த்ரியின்  விவரங்கள் கிடைத்தது. அவரைத் தேடி வேலூர் சென்றேன். அவர் இருந்த அந்த அனாதை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்.

'நான் உங்களோட உதவி நாடி இங்க வந்திருக்கேன். நீங்க உண்மையை மட்டும் பேசுவிங்க என்ற நம்பிக்கையில்' என்றேன்.

'என்ன உதவி வேணும் சொல்லுங்க. அந்த ஏசுவின் கிருபையால் என்னால் முடிந்ததை செய்றேன்' என்றார் அந்த கன்னிகாஸ்த்ரி.

'சமீபத்தில் உங்கள சந்திக்க, உங்களுக்கு தெரிந்த பெண் யாராவது உங்களைத் தேடி வந்தாங்களா?' என்று கேட்டு அவர் பதிலை எதிர் பார்த்து காத்திருந்தேன்.  அவர் முகத்தில் ஒரு வித குழப்பம் தோன்றி மறைந்தது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'நான் போலீஸ் இல்ல, நான் ஒரு பிரைவேட் டீடெக்டிவ். அவங்களுக்கு உதவி பண்ணத்தான் இங்க வந்திருக்கேன்' என்று ஒரு பொய் சொன்னேன்.

'அந்தப் பெண் செய்த கொலைக்கு பாவ மன்னிப்பு வாங்கி அவ கர்த்தர் கிட்ட தன் பாவத்தை இறக்கி வைச்சுட்டா. அவள பத்தி நீங்க அவ கிட்டயே கேட்டுக்கோங்க' என்று என்னை அந்தப் பெண் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவளது கதையையும் சொன்னார்.

சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து, இந்த இல்லத்திலேயே வளர்ந்து வந்த பைரவி, ஏசுவின் உதவியால் கலைக்கல்லூரியில் படித்து பட்டப்படிப்பு படித்து திருச்சபையிலேயே சில பணிகளை செய்து வந்திருக்கிறாள். ஏழு மாதங்களுக்கு முன்பு காமேஸ்வரன் என்ற ஒரு வாலிபன் தாமாக இவளை மனம் முடிக்க முன்வந்து, இவளை திருமணம் செய்துகொண்டு சென்னை அழைத்துச் சென்றான் என்றும், அதன் பின் இப்பொழுதுதான் அவளை இந்த நிலையில் கண்டதாகவும் அவர் சொல்லி வருத்தப்பட்டார்.    
     
ஒரு சாயம் போன வெந்தைய நிற சல்வாரில் வந்த பைரவி, அழகான உடலமைப்பு கொண்டிருந்தாலும், சரியான தூக்கமின்றி கண்களுக்கு கீழ் கரு வளையத்துடன் பொலிவிழந்து காணப்பட்டாள். அவளிடம் ''எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரியலை. ஏன் இப்படி செய்திங்க?" என்று கேட்டேன்.

புன்முறுவலுடன் பைரவி, "வாழத் தகுதியற்றவர்கள் அவர்கள்" என்று அந்நியன் விக்ரம் போல கூறித் தன் கதையை கூறினாள்.

அனாதை இல்லத்தில் இருந்து திருமணம் செய்துகொண்டு அன்று இரவு அவளை சென்னை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். சென்னை வந்த பின் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி அந்த வீட்டில் அவன் மனைவி இருப்பது அவளுக்கு தெரிந்தவுடன், அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைரவியை அந்த ஜன்னல் இல்லாத மர்ம அறையில் தள்ளி பூட்டி விட்டான். சவுண்ட் ப்ரூப் என்பதால் அவள் கூச்சல் வெளியே கேட்பதில்லை. பகல் முழுவதும் அவள் அறையினுள்ளே பூட்டி வைக்கப் பட்டிருந்தாள்.

அன்று இரவு அவளுக்கு உணவு கொடுத்து, பின் அவளை கட்டாயப்படுத்தி, இருவருடன் உடலுறவு கொண்டிருக்கான் அந்த காமேஸ்வரன். சில நாட்கள் இதுவே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் இரவு, அவளை தன் முதல் மனைவியோடு ஓரினச்சேர்க்கைல ஈடுபட கட்டாயப்படுத்தி இருக்கான். பைரவி அதற்கு மறுத்தவுடன், அவளை பெண் என்றுகூட பாராமல் தன் ஆத்திரம் அடங்கும் வரை, பாக்சிங் பையை அடிப்பது போல் அவள் வயிற்றை அடித்திருக்கிறான் அந்தக் காமக்கொடூரன். ஒரு கட்டத்தில் சித்தரவதை தாங்க முடியாமல் அவர்களின் ஆசைக்கு இயந்திரம் போல இணங்கியிருக்காள் பைரவி. தினமும் பைரவி முதல் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் பொழுது, அதைக் கண்டு அந்தக் காமக்கொடூரன் சுயயின்பம் கொள்வது வழக்கமாயிற்று.

'பாஸ்டர்ட்ஸ்' என்று பிரியா முணுமுணுத்தது ராகவன் காதில் விழாதது போல் அவன் மேலும் தொடர்ந்தான்.

இப்படி ஒரு கொத்தடிமையாக அவள் வாழக்கை செல்ல, ஒரு நாள் இரவு கழிவரையில் இருக்கும் பொழுது அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டாள்.

'காமா எனக்கு இவ ரொம்ப போர் அடிச்சு போயிட்டா.' என்று அவன் முதல் மனைவி சொல்ல 'இன்னும் ரெண்டு வாரம் தான். கோவைல இருக்கற ஒரு ஆஷ்ரமத்துல ஒரு பெண் பார்த்திருக்கேன். இவ சாப்பாட்டுல வழக்கம் போல அர்செனிக் கலக்க வேண்டியதுதான்' என்று அவர்கள் பேசிக்கொண்டது இவளை திடுக்கிட செய்தது. தன்னைப் போல் பல பெண்களுக்கு இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதா என்று நொறுங்கிப்போனாள். இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று தன்னுள் முடிவு செய்தாள்.

அன்று இரவு அந்த அர்செனிக் இருக்கும் ஜாடியை கண்டுபிடித்து, அவர்கள் சற்று அசந்த நேரத்தில் அவர்கள் உணவில் கலந்து விட்டாள். அவர்கள் உறக்கத்தில் இறந்தது போல் ஏற்பாடு செய்துவிட்டு, பால்கனி கிரில் கதவு வழியே இரண்டாவது சாவி கொண்டு வெளியே வந்து, பின் உள் பக்கமாக பூட்டி விட்டு, அந்த அனாதை இல்லத்திற்கே மீண்டும் திரும்பி விட்டதாக சொல்லி முடித்துவிட்டு, 'நீங்க இத போலீஸ் கிட்ட சொன்னாலும் எனக்கு கவல இல்ல. பல முகம் தெரியாத பெண்கள காப்பாத்தன சந்தோஷத்திலேயே நான் தூக்குல தொங்கத் தயார். ஒரு தடவ மதர பார்த்து அவங்க மடியில எல்லாம் சொல்லி அழனம்னு தான் இங்கே வந்தேன்' என்று அவள் முடிக்கும் பொழுது அவள் கண்ணில் நீர் ததும்பியது.

'நீங்க செய்தது சட்டப்படி குற்றமா இருக்கலாம். ஆனா தர்மப்படி அது தப்பு இல்ல. நான் தர்மத்தின் பக்கம். உங்க ரகசியம் என்னோட மறையும்' என்று நான் சொல்லியவுடன், எனக்கு நன்றி சொல்லி மேலும் ஒரு உதவி கேட்டாள்.        

மார்கழி 28 

ஆச்சரியத்தில் இருந்த பிரியா,  "அது எப்படி சாப்பாட்டுல அர்செனிக் கலந்தா, சாப்படும் பொழுது தெரியும் இல்ல? அப்பறம் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல எப்படி மிஸ் ஆச்சு" என்று ராகவனை விசாரித்தாள்.

"பிரெஞ்சு மனனர் நெப்போலியன் சாவுல இருக்கறதா சந்தேகபட்படர அர்செனிக், இந்தக் கொலையிளையும் சம்மந்தப்பட்டு இருக்குறது வினோதம்தான்.  அர்செனிக் ஒரு பழங்கால விஷம்.அர்செனிக்கோட பியுட்டியே அதுக்கு வாசனை, நிறம், சுவை எதுவுமே கிடையாது தான். நீர்ல, இல்ல சாப்பாட்டுல கலந்தா கண்டே பிடிக்க முடியாது. அதோட விஷம் கொடுக்கற எபக்ட் எல்லாமே புட் பாய்சன் போலத்தான் இருக்கும். அதனால சாப்புட்ரவங்களுக்கும் தெரியாது,பிரேதப்பரிசோதனையிலும் தெரியாது" என்று பெருமையுடன் கூறி, 'இதையெல்லாம் நீ போய் போலிஸ்ல சொல்ல மாட்டதன?" என்று சந்தேகத்துடன் கேட்டான்.

"நீ என்னப் புரிந்துக்கொண்டது அவளதானா.நானே அவங்கள கொன்னிருப்பேன். இந்த பைரவி ரொம்ப பாவம். நம்ம கல்யாணத்துக்கு வேற கேஸ் கிடக்கும்" என்று அவன் தோள் மீது சாய்ந்தவள் சட்டென்று எழுந்து 'அவ என்ன உதவி கேட்டா சொல்லவே இல்லையே?' என்று வினவினாள்.

"எல்லாத்தையும் நானே சொல்லிட்டா என்ன சஸ்பென்ஸ் இருக்கும். நாளை காலை தினசரில செய்தி வரும் " என்று  சொல்லி, தன் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, " ரெண்டு புது மாட்ரிமோனியல் ப்ரோபைல் வந்திருக்கு நான் கிளம்பறேன்" என்று கேள்விகளுடன் இருந்த பிரியாவின் கன்னத்தில் முத்தமிட்டு ராகவன் புறப்பட்டான்.                            
   
மார்கழி 29

காலையில் எழுந்தவுடன் தன் தந்தை கையில் இருந்த தினசரியை பிடுங்கி, பக்கங்களை ஆராயத் தொடங்கினாள். மூன்றாவது பக்கத்தில்:

சமீபத்தில் கணவன் மனைவி புட் பாய்சனால் இறந்து கிடந்த வீடு நேற்று இரவு திடீரென காஸ் சிலின்டர் வெடித்து தீ பிடித்தது. அந்தப் பகுதி மக்கள் அமானுஷ்ய பயத்தில்.............